அப்பாவிற்காக ஒரு கவிதை..!


நான் சும்மா ஒரு கவிதை எழுதிக் கொண்டிருந்தேன், அந்த வேளை என் மகள் தரணிகா என்னிடம் வந்து,

"என்னப்பா செய்றிங்க" எனக் கேட்டாள்

நான் "கவிதை எழுதுகிறேனம்மா" என்றேன்.

மகளும் உடனே,
"எனக்கும் ஒரு பேனையும், பேப்பரும் தாங்கப்பா" என்றாள்.

நான் "எதற்கம்மா" என்றேன்.

என் மகளோ,
"உங்களுக்குத்தான் கவிதை எழுதத் தெரியுமா, எனக்கும் எழுதத் தெரியுமே" என்று,

சிறிது நேரத்தில் ஒரு படமும், இன்னோரு காகிதத்தில் எதையோ கிறுக்கினது போல் இருந்ததையும் தந்தாள்.

"இது என்னம்மா" என்று கேட்டேன்,

"இது அப்பாவும், அம்மாவும், நானும்... இதில் அப்பாவிற்கு நான் கவிதை எழுதிக் கொடுக்கிறேன்" என்றும்,

"இந்தக் கிறுக்கல் என்னம்மா" என்று கேட்க...

"இது அப்பாவுக்கு நான் எழுதிய கவிதை" என்று என்னிடம் தந்து என் மனதை நெகிழ வைத்து விட்டாள்.

ஒரு அப்பாவிற்கு இதை விட வேறு என்ன வேண்டும்..?

என் மகள் தரணிகாவின் "அப்பாவிற்கான கவிதையை" என்னைப் போன்ற அப்பாக்களும் படித்துப் பார்க்கவே இங்கே பதிவிடுகின்றேன்

- வல்வை அகலினியன்
          (20.10.2013)
ஆட்லறி பல்குழல் அனைத்தும்....
இவனது ஆறடிக்குள் அடங்கிவிடும்!!!

தமிழர்களின் பேராயுதமும் இவனே..!
தமிழர்களின் பாதுகாவலனும் இவனே..!!






விடுதலைப் புலிகள், சிறுவர் போராளிகளை உருவாக்கியது உண்மையா?


விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறுவர் போராளிகள் இருந்தார்கள் என பல ஆண்டுகளாக சர்வதேசமும், சர்வதேச அமைப்புக்களும் இலங்கையுடன் சேர்ந்து குற்றம் சுமத்திய வண்ணமே உள்ளனர்.

இன்று வரையும் புலிகளை முற்றிலுமாக ஒழித்து விட்டோம் என்று சொல்லிய பிறகும், அந்தக் குற்றச்சாட்டுக்கள் முற்றுப் பெற்றதாகத் தெரியவில்லை!

சர்வதேசம் சிலவேளைகளில் மறந்து போய் அமைதியாக இருந்தாலும் தமிழர் விரோத சக்திகள் மீண்டும் "சிறுவர் போராளிகள்" விடயத்தினை இலங்கை அரசுடன் சேர்ந்து ஊதிப் பெருப்பித்து விடுகின்றனர்.

இவ்வாறான சில நஞ்சுத் தமிழர்களினால்தான் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு சர்வதேச அரங்கினில் தடைகளும் உருவாகி எமக்கான ஒரு தேசம் உருவாகமல் முள்ளிவாய்க்கால் யுத்தம் வரை வந்து எமக்கான பேரவலங்களை உருவாக்கி பெரும் துன்பங்களாக முடிந்து போனது. இதை யாரும் மறுக்க முடியாது.

சிறுவர் போராளிகள் விடயம் சிலருக்கு சாதாரணமான விடயமாக இருக்கலாம், ஆனால், அதன் தாக்கங்கள் புற்று நோயைப் போல் பாரதூரமானது.


விடுதலைப்புலிகளை மனிதாபிமானம் அற்றவர்களாகவும், இரக்கம் இல்லாதவர்களாகவும் ஒரு போலியான தோற்றத்தை உருவாக்கி விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என சர்வதேச அளவில் முத்திரை குத்தி விட இப்படியான போலியான அர்த்தமற்ற, உண்மையற்ற குற்றச்சாட்டுக்கள் காரணங்களாக அமைந்து விடுகின்றன.

உண்மையில் விடுதலைப்புலிகள் அமைப்பில் "சிறுவர் போராளிகள்" இருந்தார்களா? இருந்தார்கள் என்று சொல்பவர்களிடம் ஒன்றைத் தெளிவு படுத்த விரும்புகின்றேன்.

எந்தவொரு நாட்டிலும் சிறுபான்மையின மக்கள் மீது அந்நாட்டு ஆளும் வர்க்கம் அதீதமான அழுத்தங்களை பல வடிவங்களில் பிரயோகிக்கும் போது... அந்த ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்களில் இருந்துதான் ஆயுதப் புரட்சி வெடிக்கின்றது.


அந்த ஆயதப் புரட்சியானது தமக்குரிய உரிமைகளையும், நீதிகளையும் பெற்றுக் கொள்வதற்கே! அப்படிப்பட்ட அந்தப் புரட்சியாளர்களைத்தான் இன்று வரையும் சர்வதேச சமூகம் பயங்கரவாதிகள் எனவும், தீவிரவாதிகள் எனவும் குற்றம் சுமத்தி அடக்கி ஒடுக்கி வருகிறது! (இதில் சில இசுலாமிய தீவிரவாத அமைப்புக்களை சேர்த்துக் கொள்ள முடியாது) இதே போல்தான் ஈழத்தமிழர் போராட்டமும்.

ஒரு குறுகிய தேசத்தில் வாழ்கின்ற சிறுபான்மையின மக்களை துன்புறுத்தி அவர்களின் உரிமைகளைப் பறித்து, உணர்வுகளை நசுக்கி ஒடுக்கி வருவதுடன் அந்த மக்கள் மீது பொருளாதாரத் தடைகள், மருத்துவத் தடைகள் என பல தடைகளை விதித்து... கடல், தரை, வான் பகுதியில் இருந்து தினமும் தாக்கி அழித்து பாரிய உயிர்ச்சேதங்களையும், உடமைச் சேதங்களையும் உருவாக்கி விடுகிறது சிங்கள அரசு.


அந்த யுத்த தேசத்தில்தான் பெற்றோர்களை இழந்த குழந்தைகளானவர்கள் தங்குமிட வசதி, உறங்குமிட வசதி, உணவு வசதி ஏதுமின்றி தவித்துப் போய் விடுகிறார்கள். தம்மைக் காப்பாற்றிக் கொள்ள தங்களது உறவினர்களுடன் போய் தங்கிக் கொள்ளலாமென்றால் அதுவும் சாத்தியமாகாது! காரணம், அந்த உறவினர்கள் கூட யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு தங்குமிட வசதிகள், உணவு வசதிகள் ஏதுமில்லாமல் இடப்பெயர்வுகளுடன் அடுத்த நிமிடம் என்னவாகுமோ எனத் திகிலோடு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சித்துக் கொண்டே இருப்பவர்களாவார்கள்.

தம்மையே காப்பாற்றிக் கொள்ள முடியாதவர்கள், எவ்வாறு அடுத்தவர்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்?


பாடசாலை போனால்... பாடசாலை அகதி முகாம்களாகவும் சில வேளை பாடசாலை யுத்தத்தினால் அழிவுற்றதாகவும், கோவில்கள் போனால் கடவுளே இல்லாமலும், கோவில்கள் சேதமடைந்தும் ஒரு சூனியநிலையினை உருவாக்கி மனதில் விரக்தியினை ஏற்படுத்தி விடும்.

நேரடி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளானவர்கள் பெற்றோர்களை இழந்து ஒரு இடத்தில் நின்று அழக்கூட முடியாத அவல நிலையில் அகதியாக... அனாதையாக உணவின்றி, உறையுளின்றி ஓடியோடி தம்மைத் தாக்கி... தமது பெற்றோர்களை அழித்த எதிரிகளை பழி தீர்க்க வேண்டும் என்ற குரோத எண்ணமானது அந்த வலி நிறைந்த குழந்தைப் பருவத்திலேயே உருவாகி விடுகிறது.


அந்த வேளையில் தமக்குப் பாதுகாப்பாகவும், தமது உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் உறவினர்கள் மறுத்த வேளையிலும் கூட விடுதலைப் புலிகள் அமைப்பே அவர்களின் கண் முன் வந்து நின்றது.

இன்று பாரதூரமான குற்றச்சாட்டினை முன் வைக்கின்ற ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமானது (UNICEF) அந்தக் குழந்தைகள் அனாதரவான நிலையில் நின்ற போது திரும்பிக்கூடப் பார்த்தில்லை! இனவெறி பிடித்த இலங்கை அரசு கூட இரக்கம் காட்டாமல் அவர்களை மேலும் மேலும் தாக்கி அவர்களுக்குள் விரோதப் போக்கினையே உருவாக்கியது.

மேற்குறிப்பிட்ட அனாதரவான சிறுவர்கள்தான் தமது முக்கிய தேவையான உணவிற்கும், இருப்பிடத்திற்கும் வேறு சிறுவர்களோ தமது பெற்றோர்களை கொலை செய்த எதிரியை பழி தீர்க்கவும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைய முன் வந்தார்கள்.


இதில்தான் சிலர் முக்கியமாக ஒன்றினைக் கருத வேண்டும். திரைப்படங்களில் கதாநாயகன் குழந்தைப் பருவத்தில் இருக்கின்ற போது தனது பெற்றோரை வில்லன் கொலை செய்தால் அந்த நாயகன் பெரியவனாக வளர்ந்து அந்த வில்லனுடைய சாம்ராஜ்யத்தையே அழித்து விடுவான். இதைத்தான் திரைப்பட பார்வையாளர்களும், ரசிகர்களும் விரும்புகின்றார்கள்.

திரைப்படத்தில் வருகின்ற ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தையே இருக்கைகளின் நுனியில் இருந்து கதாநாயகன் கொலை செய்ய வேண்டும் என துடிக்கும் நீங்கள்... நிஜ வலிகளோடு தனது குடும்பம், தனது இருப்பிடம், தனது ஊர், தனது முகவரி அனைத்தையும் இழந்தவன், பல துயர வலிகளோடு தானும் போராளியாகி எதிரியை பழி வாங்கத் துடித்தால்... ஏன் அவர்கள் மட்டும் உங்கள் கண்களுக்கு எந்த வலிகளும் இல்லாத "சிறுவர் போராளியாகத் தெரிகின்றார்கள்??


உடனே நீங்கள் கேட்பீர்கள் "திரைப்படத்தில் கதாநாயகன் வளர்ந்துதானே பழி வாங்குகிறான்" என்று? உண்மைதான்! நீங்கள் நினைப்பது போல் ஒற்றைப் பாடலில் வளர்ந்து பெரியவனாக வளர இதுவொன்றும் திரைப்படம் இல்லை.

அவர்கள் விடுதலைப் புலிகளோடு இணையாவிட்டால் உணவின்றி பட்டினியாலும், உறவின்றி பாதுகாப்பில்லாமலும் இறந்தே போய் விடுவார்கள்.

இங்குதான் அனைவரும் ஒன்றினைக் கருத வேண்டும். விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர்கள் போய் இணைந்தவுடன் அவர்களைப் போராட விடுதலைப் புலிகள் ஒருபோதும் அனுமதித்ததில்லை!


இதை உறுதிப்படுத்த வேண்டுமெனில் விடுதலைப் புலிகளின் வீரர்கள் இறந்ததற்கான மாவீரர்கள் பட்டியலில் பல ஆயிரம் மாவீரர்களின் விபரம் 1982 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையிலான முழு விபரமும் இருக்கின்றது. அதில் பெயர் விபரம், பிறந்த ஊர், பிறந்த ஆண்டு என அனைத்து விபரமும் இருக்கின்றது. அந்த மாவீரர்கள் பட்டியலை சோதித்துப் பார்த்தால் தெரியும். அந்தப் பட்டியலில் சிறுவர் போராளிகள் இறந்ததற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இருக்காது!

விடுதலைப் புலிகள் அவர்களை தத்தெடுக்கா விட்டால் அந்த அனாதரவான குழந்தைகள் அந்த யுத்த சூழ்நிலையில் இறப்பதைத் தவிர வேறு வழியேதும் இல்லை!


விடுதலைப் புலிகளும் தத்தெடுத்தவுடன் அவர்களை ஒரு போதும் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொள்வதில்லை... அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையினைக் கருத்திற் கொண்டு அவர்களுக்காகவே 90 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பெற்றோர்களை இழந்த அனாதரவான குழந்தைகளுக்கென "செஞ்சோலை" எனும் சிறுவர் இல்லத்தினை உருவாக்கினார்கள். ஆரம்ப காலப்பகுதியில் சில மாதங்களேயான கைக் குழந்தைகளில் இருந்து ஆண், பெண் என இரு பாலர்களையும் உள்வாங்கினார்கள்.

உலகில் எந்தவொரு விடுதலை இயக்கமும் எந்தநேரமும் யுத்தம் நடக்கின்ற ஒரு தேசத்தில் பெற்றோர்களை இழந்து அனாதரவான குழந்தைகளை பாதுகாக்க காப்பகங்களை உருவாக்கியதில்லை!


கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் அவர்கள் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் "போரினால் பெற்றோர்களை இழந்து தான் அனாதையாகியது போல் தமிழீழத்தில் எந்தக் குழந்தையும் அனாதையாகக் கூடாதெனவும், அவ்வாறான அந்தக் குழந்தைகள் அனைவரையும் தத்தெடுத்து நீங்கள்தான் அவர்கள் அனைவருக்கும் தாயாக வேண்டும்" எனவும் அன்பு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட தலைவர் அவர்கள் 94 ஆம் ஆண்டு காலப்பகுதியில் "காந்தரூபன் அறிவுச்சோலையான" ஆண் குழந்தைகளுக்கான ஒரு குழந்தைகள் காப்பகத்தை உருவாக்கினார்.

செஞ்சோலையில் வளர்ந்து வந்த ஆண் குழந்தைகள் அனைவரையும் காந்தரூபன் அறிவுச்சோலையில் இணைக்கப்பட்டு கல்வி போதிக்கப்பட்டது. செஞ்சோலை பெண் குழந்தைகளுக்காக மட்டுமென மாற்றப்பட்டது.


பெற்றோரிடமிருந்து இருந்து கல்வி பயின்ற மாணவர்களை விட செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலையில் கல்வி பயின்ற மாணவர்களே சிறந்த ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் சகல தொழில் நுட்பங்களையும் கற்று தலை சிறந்த மாணவர்களாக உயர்ந்தார்கள். இவையாவும் தமிழீழத்தில் வாழ்ந்த அனைத்து மக்களோடு புலம்பெயர் தமிழர்களும் நன்கறிவார்கள்.

18 வயது தாண்டிய படித்து முடித்த மாணவர்கள் மேற்படிப்புக்காக பல்கலைக்கழகம் சென்று படிக்கவும், வேறு வேலைகள் செய்யவும் அனுமதிக்கப்பட்டார்கள். வேறு சிலருக்கோ... திருமண வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டு அவர்கள் மகிழ்வுடன் வாழ்வதற்கு வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டு, தொழில்வாய்ப்புக்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.


போராட விரும்பியவர்கள் மட்டுமே விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்வாங்கப்பட்டார்கள். அதுவும் அவர்களின் படிப்பின் தராதரத்தை வைத்து விடுதலைப் புலிகள் அமைப்பிற்குள் பணி நிமிர்த்தம் செய்யப்பட்டார்கள்.

செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலையோடு கண் தெரியாத... காது கேளாத... வாய் பேசாதவர்களுக்கென "இனிய வாழ்வு இல்லமும்", வேறாக "பாரதி சிறுவர் இல்லமும்", "செந்தளிர் இல்லமும்", "புனிதபூமி இளையோர் இல்லமும்" சகல வசதிகளோடும் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது.

விடுதலைப்புலிகள், கட்டாயப்படுத்தி சிறுவர்களை தமது அமைப்பில் இணைத்தார்கள் என்றால்.... எதற்கு காலத்தையும், நேரத்தையும் வீண் விரயமாக்கி எந்த நேரமும் யுத்தம் நடக்கின்ற ஒரு குறுகிய தேசத்தில் தேவையில்லாமல் பல குழந்தைகள் காப்பகங்களை உருவாக்கி பராமரிக்க வேண்டும்?


இவைகள் ஒரு புறமிருக்க.... பல இணையத் தளங்களிலும், முகநூல்களிலும் (Facebook) சில விஷமிகள், வரிப்புலி சீருடை அணிந்த குழந்தைகள், சிறுவர்கள் படத்தினை பதிவு செய்து... விடுதலைப்புலிகள் அமைப்பில் "சிறுவர் போராளிகள்" இருந்தார்கள் என முட்டாள்தனமான கருத்துக்களைப் பதித்துப் பரப்பி வருகிறார்கள்.

இதில் மிகவும் வேதனை என்னவென்றால், எனது மகள் துவாரகாவையும் சிறுவர் போராளியாக்கி விட்டார்கள்.


புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரேதேசத்திற்குள் வாழ்ந்த அனைத்துத் தமிழர்களும் விடுதலைப்புலிகளை கதாநாயகர்களாகவும், காவல் தெய்வங்களாகவும் வணங்கி வந்தார்கள். அத்துடன் தமது குழந்தைகளுக்கும் விடுதலைப் புலிகளின் சீருடைகளை அணிவித்து அழகு பார்த்தார்கள். தாயும் தந்தையும் போராளியாக இருந்தால், நிச்சயமாக தமது குழந்தைகளுக்கும் சீருடை அணிவித்தே நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள். விடுதலைப் புலிகளின் சீருடையினை அணிவதனை வீரமாகவும், கௌரவமாகவும் கருதினார்கள்.


பாடசாலை நிகழ்வுகளில் வினோத உடைப் போட்டி வந்தால் அதிகமான குழந்தைகள் விடுதலைப் புலிகளின் சீருடையினை அணிந்தே நாட்டைப் பாதுகாக்கும் வீரர்களாக வேடமணிந்து முதல் பரிசினையும் பெற்றுக் கொண்டு விடுவார்கள்.

இதேபோல்தான் எனது மூத்த மகளுக்கு அவரது மூன்று வயதில் வரிப்புலிச் சீருடையினை அணிவித்து அழகு பார்த்தேன்... இப்போது அந்தப் படத்தினையும் பதிவிட்டு "சிறுவர் போராளி" என சொல்லி பதிவிட்டு விமர்சித்து வருகிறார்கள்.

உண்மையிலேயே... மனசாட்சி இல்லாமலும், சிந்திக்கும் ஆற்றல் இல்லாமலும் இருப்பவர்களிடம் நான் சிலவற்றைக் கேட்க விரும்புகின்றேன்?

தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சிலர் என் முகநூல் தனிச்செய்தியில் வந்து என் மகளின் படத்தினை வைத்து கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்கள் அவர்களிடமும் சில கேள்விகள்?


■ உங்கள் நாட்டுப் பாடசாலை நிகழ்வுகளில் வினோத உடைப் போட்டிகளில்... கடவுள்களாக, திருவள்ளுவராக, பாரதியாராக, ஔவையாராக, ஆசிரியர்களாக அல்லது வேறு தலைவர்களாக ஏன் உங்கள் நாட்டுக் காவல் துறையாக, தேசத்தையே பாதுகாக்கும் இராணுவ வீரர்களாக வேடம் போடச் சொன்னால்... நீங்கள் அனைவரும் உங்கள் குழந்தைகளுக்கு கோவணத்தைக் கட்டி விட்டா பாடசாலை நிகழ்வுகளுக்கு அனுப்புவீர்கள்?? இல்லைத்தானே?

■ நீங்கள் மட்டும் இராணுவ வீரராக அல்லது வேறு எப்படியும் உங்கள் குழந்தைகளுக்கு உடை அணிவித்து வினோத உடைப் போட்டிகளுக்கு அனுப்பலாம்... ஆனால், ஈழத்தில் வாழும் தமிழர்கள் மட்டும் தங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் நாட்டு இராணுவ உடை அணிந்து அனுப்பினால்... உங்கள் குருட்டுக் கண்களுக்கு அவர்கள் சிறுவர் போராளிகளா?


உங்கள் ஊர் சிவகாசிப் படங்களில் (Poster) அதிகமான படங்களில் குழந்தைகள் இராணுவ வீரனாக, மருத்துவராக வேறு பல தலைவர்களாக காட்சி அளிப்பார்கள். (ஈழத்திலும் சிவகாசி மாதிரி ஓர் ஊர் இருந்திருந்தால் இன்னும் பெரிய படங்களாக வெளி வந்திருக்கும். அவ்வாறானதொரு ஊர் இல்லாமல் இருந்தமையால்தான்... இது போன்ற சிறிய படங்கள் வந்திருக்கின்றது.) சிவகாசி படங்களில் வருகின்ற இந்தியா இராணுவ சீருடை அணிந்த குழந்தைகளைப் பார்த்து விட்டு "அட இந்திய இராணுவத்தில் குழந்தைகளும் இருக்கின்றார்கள்" என்று எந்தவொரு ஈழத்தமிழர்ளும், தமிழ் உணர்வாளர்களும் சொல்லுவார்களா?

■ உலகத்தில் எந்த நாட்டிலாவது துப்பாக்கியை விட சிறியதாக இருக்கும் மூன்று வயதுக் குழந்தை துப்பாக்கி தூக்கி போராடிய சரித்திரம் உண்டா? மூளையில்லாத விசக்கிருமிகள் சொன்னதைக் கேட்டு உங்களை, நீங்களே முட்டாள்களாக ஆக்காதீர்கள்!!


■ உங்கள் நாட்டில் ஈழத்தில் நடந்த யுத்தம் மாதிரி எதுவும் நடக்கவில்லை. அதனால், நீங்கள் விமர்சனம் செய்கின்றீர்கள். உங்கள் நாட்டிலும் முப்பது வருடங்களுக்கு மேலாக ஒரு சிறுபான்மை இனத்தை கடுமையான யுத்தத்தினால் நசுக்கி எல்லா வளங்களையும் முடக்கி தாய், தந்தை உறவுகளை கொலை செய்து குழந்தைகளை அனாதையாக்கினால்... உங்களால் அக் குழந்தைகளை காப்பாற்றியிருக்க முடியுமா?

தமிழீழத்தில் இறுதி யுத்தம் நடப்பதற்கு முன்னரான காலப்பகுதியில் அங்கு அனாதைக் குழந்தைகளே கிடையாது!

■ போரினிலே பெற்றோரை இழந்த சுமார் நான்காயிரம் குழந்தைகளுக்கு தலைவர் பிரபாகரன் அவர்களே தாயும் தந்தையுமானார். அவர் அந்தக் குழந்தைகளுடன் இருக்கின்ற சுமார் ஆயிரக்கணக்கான படங்கள் இணையங்களில் இருக்கின்றது. அதைவிட்டு அடுத்தவர் குழந்தைகளின் வினோத உடைப் போட்டிக்கு எடுத்துக் கொண்ட ஒரு சில படங்கள்தான் உங்கள் கண்களுக்கு தெரிகின்றதா?


■ சிறுவர் போராளிகளாக இருந்திருந்தால் எதற்கு காந்தரூபன் அறிவுச்சோலை, செஞ்சோலை, இனியவாழ்வு இல்லம், செந்தளிர் இல்லம், பாரதி சிறுவர் இல்லம், புனிதபூமி இளையோர் இல்லம் போன்றவைகளை உருவாக்க வேண்டும்? இவைகள் தேவையற்ற ஒன்றுதானே? இக்காப்பகங்களை விடுதலைப்புலிகள் உருவாக்கி குழந்தைகளை பராமரித்து வந்தது உலகிற்கே தெரியும். ஏன், இது சம்பந்தமான பதிவுகள் கூட ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தில் (UNICEF) இருக்கின்றதே! இந்தக் காப்பகங்களால்தான் ஈழத்துக் குழந்தைகள் எவரும் 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் அனாதையாகவில்லை!

■ உங்கள் நாட்டில் ஈழத்தில் ஏற்பட்ட போர் போன்று ஒன்று ஏற்பட்டிருந்தால்... இவ்வாறான அனாதைக் குழந்தைகளை நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? போர் இல்லாமல் இருந்தே... இப்பொழுதும் பேரூந்து நிலையங்களிலும், கோவில்களிலும் வேறு இடங்களிலும் குழந்தைகள் பிச்சை எடுத்து பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றார்கள். வேறு பல குழந்தைத் தொழிலாளர்களை தேனீர்க்கடைகளில் அடிமைகளாக வேலை செய்வதையும் பார்க்கலாம்!


■ நீங்கள் பன்னிரண்டு வயது சிறுவர்களாக இருக்கும் போது, உங்கள் வீடுகளில் ஒரே ஒரு திருடன் புகுந்து உங்கள் கண்முன்னாலேயே உங்கள் குடும்பத்து அங்கத்தவர்களை துன்புறுத்தி, பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினால்... அங்கே அந்தக் கோரமான கேவலமான காட்சிகளை பார்த்து இரசித்துக் கொண்டிருப்பீர்களா? அல்லது எதிர்க்கத் துணிவீர்களா?

அங்கே பத்து வயதிற்குட்பட்ட பாலகனாக இருந்தாலும் அந்தக் காமூகத் திருடனை, அந்தப் பாலகனானவன் கொலை செய்து தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் எந்தத் தாயும் விரும்புவாள்! இது அவரவர்களுக்கு வந்தால்தான் புரியும்! உங்களைப் போன்றோருக்கு எங்கே புரியப் போகின்றது?


1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பல ஊர்களுக்குள் புகுந்த காட்டுமிராண்டி சிங்களப் படைகள், பல தமிழ் குடும்பங்களை கைது செய்து குழந்தைகளுக்கு முன்னாலேயே தந்தை, ஆண் சகோதரர்களைக் கட்டிப் போட்டு... தாய், சகோதரிகளை நிர்வாணமாக்கி கூட்டம் கூட்டங்களாகக் கதறக் கதற கற்பழித்துக் கொலை செய்து விட்டு பின் கட்டி வைக்கப்பட உறவுகளையும் கொலை செய்து விட்டுச் சென்று விடுவார்கள். அங்கிருந்து பழி வாங்க வேண்டும் என்ற வெறியோடு வரும் குழந்தைகளைத்தான்... விடுதலைப்புலிகள் தமது அன்புக் கரங்களால் அணைத்து செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை போன்ற காப்பகங்கள் மூலம் அரவணைத்தார்கள்.

■ உங்கள் தமிழ்த்திரைப்படங்களில் உங்கள் நட்சத்திரத் தலைவர்கள் சிறுவர்களாக எது செய்தாலும் ஏற்றுக் கொள்ளும் நீங்கள்... உங்கள் இதயத்தோடு தொங்கிக் கொண்டிருக்கும் தொப்புள் கொடி உறவுகளின் நீதியான, நியாயமான விடுதலைப் போராட்டத்தினை இவ்வாறுதான் விமர்சித்து அறுத்து விடுவீர்களா?

"விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர் போராளிகள் இருந்தார்கள்" என வாய் கிழிய கத்தி ஓலமிடும் ஓநாய்களே..!


2009 ஆம் ஆண்டின் பின் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் பெற்றோர், உறவினர்களை இழந்த பல ஆயிரம் குழந்தைகள் அனாதைகளாக, அடிமைகளாக தெருத்தெருவாக பிச்சை எடுத்து அலைகிறார்கள்! பல சிறுமிகள் துன்புறுத்தி கற்பழிக்கப்பட்டு கட்டாய விபச்சாரிகளாக உருவாக்கப்பட்டுள்ளார்கள்! இன்றும் கூட வவுனியா தெருக்களில் பல பெண் குழந்தைகள் விபச்சாரிகளாக எதிர்காலத்தினை தொலைத்து இருளோடு உறவுகளின்றி, முகவரி இழந்து தெருத் தெருவாக அலைகிறார்கள்! இக் குழந்தைகளை ஏன் உங்களால் காப்பாற்ற முடியவில்லை?

விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் இக் குழந்தைகள் அனாதைகளாகி கண்ணீர் சிந்தியிருக்க மாட்டார்கள்! சிறுமிகள் கசங்கி இரத்தம் சிந்தியிருக்க மாட்டார்கள்! செஞ்சோலையில் அழகிய வண்ணப் பூக்களாக பூத்திருப்பார்கள்! இன்று இக்குழந்தைகள் பூப்பதற்கு செஞ்சோலையும் இல்லை! கூடுகட்டி வாழ்வதற்கு காந்தரூபன் அறிவுச் சோலையும் இல்லை!


சிறுவர் போராளிகளை விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள் என்பது முழுத்தவறு! சிறுவர் போராளிகள் இலங்கை அரசின் இனவெறி பிடித்த யுத்தத்தினால் உருவாக்கப்பட்டார்கள்.

● பெற்றோரைக் கொலை செய்து தங்குமிடத்தை அடியோடு அழித்து, ஊரை விட்டுத் துரத்தி, முகவரிகளே இல்லாமல் செய்து குரோத மனப்பாங்கினை உருவாக்கி பல ஆறாத வலிகளைக் கொடுத்து அவர்களையும் போராளியாகி போராடத் தூண்டியமைக்கான முதல் குற்றவாளி... இனவெறி பிடித்த இலங்கை அரசே!

● அதே குழந்தைகள் உணவில்லாமல் அலைந்து உடையுடுத்தி, உறையுள் கொள்ள ஏதும் இல்லாமல் உள்ளத்து வலிகளோடு... உடல் காயங்களோடு தெருத்தெருவாக அலையும் போது கண்டு கொள்ளாமல் அறிக்கை விட்டுக் கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமே... இரண்டாவது குற்றவாளி!

● ஆயுதங்கள் வழங்கியது மட்டுமல்ல போரினையும் ஊக்குவித்து மக்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்து கைகட்டி நின்ற சர்வதேசமே... முன்றாவது குற்றவாளி!

இறுதியாக...

● இன்றும் கூட அதே குழந்தைகள் யாருமே இல்லாமல் ஆதரவற்று அனாதைகளாக அலையும் போதும்... விபச்சாரிகளாக்கப்பட்டு துன்பறுத்தப்படுவதையும் செய்திகள் ஊடாகக் கண்டும் காணாமல் இருந்து வாய்கூசாமல்... மனச்சாட்சியே இல்லாமல் விமர்சிக்கும் நீங்கள் நான்காவது குற்றவாளியல்ல..! மிகவும் மோசமான கேவலங்கெட்ட ஈனப்பிறவிகள்! 


புலிகள் விதைகளை பூக்களாக்கினார்கள்! நீங்கள் அந்தப் பூக்களின் இதழ்களை புடுங்கி கருக்கி மண்ணிற்குள் புதைக்கின்றீர்கள்..!!!

பூக்களை மறுபடியும் பூக்கவிடுங்கள்! அவர்கள் அழகழகான பூக்களாகப் பூத்து தேசத்தை அலங்கரித்து, அவர்களால் அழகிய தேசம் உருவாகட்டும்!

- வல்வை அகலினியன்
                (21.03.214)

இந்தப் பதிவின் இணைய வடிவம்:

1, தமிழ்வின் இணையம்
2, பதிவு இணையம்
3, வெளிச்சவீடு இணையம்
4, விவசாயி இணையம்
5, www.asrilanka.com
6, தமிழர்குரல் இணையம்
7, தினப்புயல் இணையம்

பிரபாகரன் இறைவன் ஆனான்… ஆறுமுகன் இறந்து போனான்.!!



ஆசியாக் கண்டத்தின்
உச்சத்தில் உதித்த
ஈழத்துச் சூரியன்!
அச்சத்தில் மூழ்கிய
அப்பாவித் தமிழரின்
விலங்கினை உடைத்து
உலகின் உச்சத்தில் வைத்த
உன்னதத் தலைவன் இவன்!

பிரித்தானிய வெள்ளையனுக்குப் பின்
தமிழனை சிங்களக் கொள்ளையன்
அடிமைப் படுத்தி ஆண்ட போது…
இலங்கைத் தலையின் மூளையில்
வல்வைத் தாயின்…
வீரத் திரு வயிற்றில்
உலகத் தமிழர்களின்…
ஒட்டு மொத்த மூளையாக
உயிராகி… உருவாகினான்..!

கார்கால மழையில் – ஓர்
கார்த்திகை நாளில்
இருட்டியது ஊரு…
இருபத்தி ஆறு நன்னாளில்
எடுத்தது வீரத்தாய்க்கு வலி!
பிறந்தது தமிழுக்கு வீரப்புலி!
அன்று – உருவானது
தமிழர்களுக்கான புதிய வழி!!

இலங்கைத் தலையில் பிறந்து
தமிழர்களின் மூளையானன்!
ஐம்பத்து நான்காம் ஆண்டிலிருந்து…
மூலையில் முடங்கிக் கிடந்த
ஈழத் தமிழர்களுக்கு
புதிய அத்தியாயமும் தொடங்கியது!
புதிய பாதையும் பிறந்தது!!

இரத்தச் சேறில் புதைந்த
தமிழர்களின் நிலையினையும்…
பரல் தாரில் அவிந்த
குழந்தைகளின் உயிரினையும்…
வலி நிறைந்த
வார்த்தைகளால் கேட்டு…
தன் இதய வலிகளால் சுமந்தான்!
தலைகள் அறுக்கப்பட்டும்
தமிழர்களின் சொத்துக்கள்
நொறுக்கப்பட்டும் – பெண்களின்
மானங்கள் பறிக்கப்பட்டும்
புனித உயிர்ப்பைகள் நிரப்பப்பட்டும்
தாய்மை மார்புகள் அறுக்கப்பட்டும்
தமிழர்களின் உடலங்கள் அறுக்கப்பட்டு
மாமிசங்களாக்கப்பட்டும் – வீதியோரக்
கடைகளில் விற்கப்பட்டதையும்
முகவரிகளே இல்லாமல்
அழிக்கப்பட்டதையும்…
பார்த்தும், படித்தும், கேட்டும்
பதறித் துடித்துப் போய்
பதினான்கு வயதினிலே…
பிறந்தது நெஞ்சத்தில் வலி!
சிங்களனைக் கூண்டோடு அழிக்க
பதினேழு வயதினிலே…
உறுமி கர்ஜித்தது, புதிய புலி!
நீங்கியது தமிழர்களைப் பிடித்த பிணி!
துவங்கியது…
சிங்களனுக்கு ஏழரைச் சனி!!


தாழ்ந்து போன தமிழன் எழுந்தான்!
எழுந்து வந்த தமிழன்…
உலகினில் உயர்ந்தான்!
புலியாகிப் பொங்கி எழுந்து பாய்ந்தான்!
பலியாகிப் போய் மடிந்தான் சிங்களன்!
தமிழர்களின் வாழ்வில்…
பிறந்தது புதிய விடிவு!
சிங்களனுக்குத் தொடங்கியது…
துன்பமான முடிவு!!

பதுங்கியிருந்த தமிழன் பாய்ந்தான்
பிரபாகரன் பெயர் சொல்லி எழுந்தான்..!
களங்கள் பல கண்டான்…
காவியங்கள் பல படைத்தான்..!
எதிரிப்படைகளை எல்லா முனைகளிலும்
தாக்கி அழித்தான்..!
கடல் மீது ஏறியும்…
காவியங்கள் பல படைத்தான்..!
சிறகுகள் முளைத்து…
விண் மீது ஏறியும்
வானையும் சாடினான்..!
உலக ஆயுத பெரும் பலத்தின்
முன்னால்…
மனபலத்தால் உடைத்தெறியும்
கரும்புலிகள்தனை படைத்தான்..!
எதிரி விழி பிதுங்கி
வாய் மூடி அடைத்தான்!!


பொங்கி வந்த படையெல்லாம்
நொந்த படையாகின…
நொந்து போன படையெல்லாம்
இவனை ஒரு சக்தி என்றனர்..!
தம்மைக் காப்பாற்றாத
சாமி எல்லாம் எதற்கு என்றனர்..?

இலங்கைத் தலைநகரத்தின்
தலையில் ஏறி
உலுக்கிய போதுதான்…
உலகமே உணர்ந்தது,
இவன் மனிதப் பிறவியல்ல…
கடவுள்களின் அவதாரம் என்று!!!

ஆறடி அணுகுண்டு இவனை
அனுசரித்துப் போனால்தான்…
பலனுண்டு என
பயந்தது இரக்கமற்ற இலங்கை!!
பணிந்தது வல்லாதிக்க வல்லரசுகள்!!!

தமிழனின் வீரம்
உலகறிந்த காலம்…
தமிழர்களுக்கென உருவாகியது
உலகினில் புதிய கோலம்..!
உலகறியாத் தமிழனையும்
உயரத்தில் பார்த்தது உலகம்..!
தமிழனின் தனி வீரமும்
புதிய தனித்துவமான அடையாளமும்
உலக வரலாற்றில் பதிந்து போனது!
இதுதான், பிரபாகரனின் காலம்!!!


இவனைப் போன்ற தலைவன்
உலகினில் எங்கும் இல்லை!
இவனைப் போன்ற வீரத் தலைவன்
இனி பிறக்கப் போவதும் இல்லை!!
ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்
அஞ்சா வீரத்துடன் பிறந்த
உலகின் ஒப்பற்ற தலைவன் இவன்!
தன் சொந்த மக்களுக்காகவே…
தனது இரத்தத்தையே
பலியிட்ட மானத்தலைவன் இவன்!!

மூலவளங்கள் இல்லாத
கண்ணீர்த் தேசத்திலே…
வீரத்தை விதைத்து
சுதந்திரக் காற்றினை
சுவாசிக்க வைத்து
மக்களின் கண்ணீரைத் துடைத்த
ஈர நெஞ்சுக்காரன்!!
இவனின் ஈர வரத்தினாலும்…
வீரத் தவத்தினாலும்…
இறைவனை மறந்து போய்
இவனையே இறைவன் எனக் கருதி
தமது நெஞ்சத்தில் இருத்தி
இதய தெய்வமாக வழிபட்டனர்…
ஈழ மக்களுடன்… உலகத் தமிழரும்!


உயிரற்ற…..
வார்த்தைகளை அள்ளி விடும்
அரசியல்வாதிகளுக்கு அப்பால்…
வருடத்திற்கு ஒரு தடவை பேசி
தமிழர்களின் கடவுளாகிப் போனான்!
இவனின் உயிர் வார்த்தைகளையும்
தத்துவங்களாக…
உலகமே உள்வாங்கியது!!!
பேசாமலே இருந்து பேச வைத்தான்..!
இவன் பேசிய வார்த்தைகள்…
மந்திரங்களாகின… தமிழர்களுக்கு!
இவன் பேசாத நிமிடங்கள்…
தந்திரங்களாகின… எதிரிகளுக்கு!!

காலங் காலமாக…
கடவுள்கள் செய்யாத கடமைகளை
தன்னகத்தே கொண்டு
தரணியெங்கும் வாழும் தமிழர்களின்
தனிப்பெரும் கடவுளானான்!!!

அரிதாரம் பூசிய போலியான
கதாநாயகர்களுக்கு மத்தியில்…
அரிதாரம் பூசாத உண்மையான
கடவுளின் அவதாரம் இவன்!!
கொடுங்கோல் அரக்கர்களை
புதிய அவதாரம் எடுத்து…
அழித்தொழித்தான்..!
தமிழர்களின் இதய அறைகளிலும்…
வீட்டுப் பூசை அறைகளிலும்…
புதிய கடவுளாக அவதரித்தான்!!

ஆறுமுகனைப் பார்த்தவர் யாருமில்லை!
பிரபாகரனைப் பார்க்காதவர் யாருமில்லை!!
உருவம் இல்லாத கடவுள்
மனிதரின் இதயங்களில் நிறைந்த மாதிரி
உருவமுள்ள எம் தலைவனும்
தமிழர்களின் இதயங்களில்…
இன்று வரையும் உயிரோடு வாழ்கின்றான்!!!

இல்லாத கடவுளை
இருக்கிறார் என்கிறார்கள்…
இருக்கின்ற தலைவரை
இல்லை என்கிறார்கள்!!!
இல்லாத கடவுள் இருக்கின்ற போது…
இருக்கின்ற தலைவர்
எப்படி இல்லாமல் போனார்..?
இல்லை என்று சிலரும்…
இருக்கிறார் என்று பலரும்…
சாட்சியங்கள் தேடுகின்ற
மனிதர்களின் எண்ணங்களிலும்…
தேடல் கொள்கின்ற இதயங்களிலும்…
உயிரோடு வாழ்ந்து வருகின்ற
உண்மைக் கடவுள் இவன்!!!


உருவம் இல்லாத கடவுளுக்கு
சிலைகளை உருவாக்கும் இவ்வுலகில்…
உருவமுள்ள எம் தலைவனுக்கு
அழகு வார்த்தைகளால் கூட
வர்ணனைகள் செய்ய முடியாது!
அலங்கார வார்த்தைகளால் கூட
அலங்காரம் செய்ய முடியாது!!
இவ்வுலகினில் உள்ள…
எந்த வார்த்தைகளாலும்
அலங்கரிக்க முடியாத…
உலகத் தமிழர்களின்
தனிப் பெரும் கடவுளாகிப் போனான்..!
இவன் கடவுளாகிப் போனதால்…
எதுவும் செய்யாத கடவுள்
இறந்து போனான்…!
தமிழனைக் காத்து இவன்
இறைவனாகிப் போனான்!!!

எம் இறைவனை வாழ்த்த
வார்த்தைகள் இல்லை இங்கே..!
அதனால், தமிழர்களாகிய
நாம் வணங்கிக் கொள்கின்றோம்…
எம் இதயங்களின் உள்ளே!!!

- வல்வை அகலினியன்.
               (22.11.2013)


இக்கவிதையின் இணைய வடிவம்:

1, வெளிச்சவீடு இணையம்
2, ekuruvi.com
3, விவசாயி இணையம்

சிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது!


நெஞ்சம் உருகி வெடிகிறதே உம்மை நினைக்கையிலே…. ஒரு போராளியின் குருதியில் இருந்து…..


(உண்மைச் சம்பவம்)

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நேரங்களில், நிராயுதபாணிகளாக நின்ற போராளிகளை இனம் கண்டு, அவர்களைக் கைது செய்து நிர்வாணமாக்கி கைகளைக் கட்டி பெண் போராளிகளைக் கற்பழித்தும், ஆண் போராளிகளை சுட்டும் வெட்டியும் பல வகைகளில் துன்புறுத்தி கொலை செய்து புதைத்த இலங்கை காட்டுமிராண்டி இராணுவத்தின் மானங்கெட்ட வரலாறுகளை உலகமே அறியும்.

அந்த மண்ணிலே மடிந்து போன பல போராளிகளோடு அவர்கள் அனுபவித்த வலிகளும், துயரங்களும், உண்மைகளும் அவர்களோடே மறைந்து கிடக்கின்றன..! அவர்களோடு, அவர்களின் வலிகளோடு இறுதி நேரத்திலிருந்து தப்பி வந்த சில போராளிகளின் மனதில்தான் அந்தத் துயரமான வலி நிறைந்த என்றுமே அழியாத காட்சிகள் பதிவாகி இருக்கின்றன… அப்படியான பதிவுகளில் எல்லோர் மனங்களிலும் மிகுந்த வலிகளை உருவாக்கி, இதயத்தினை உருக்கி கண்ணீர் வரவழைக்கும் பதிவுகளில் இந்தப் படத்தினில் இருக்கும் போராளியின் படமும் ஒன்று!


இந்தப் புலிவீரன் துன்புறுத்திக் கொல்லப்படும் போது அருகினில் இருந்து காப்பாற்ற முடியாத வலிகளோடு துடித்துக் கொண்டிருந்த மற்றுமொரு பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு உன்னதமான போராளியின் வலிகள் நிறைந்த வாக்குமூலமே வார்த்தைகளாக கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது.

“எனது தமிழ் உறவுகள் அனைவருக்கும்… என் மனதில் என்றும் அழியாத ரணங்களாக இருக்கும் பல உண்மைகளில் சிலவற்றை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்றே சிறை மீண்டு முகமும், முகவரியும் இன்றி கண்ணீருடன் இங்கே கூறுகின்றேன்.

இந்தப் படத்திலே இருக்கும் என் தோழனை சிங்களக் காடையர்கள் கொடுமைப்படுத்திக் கொலை செய்ததை நேரில் பார்த்தவன் நான்!, இவன், முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தின் சுற்றிவளைப்பில் என்னோடு அகப்பட்டு, இந்த வீரனை மட்டும் மூன்று நாட்களாக தென்னை மரத்திலே கட்டி வைத்து சாப்பாடு தண்ணீர் கூட கொடுக்காமல் தினமும் சித்ரவதை செய்து பட்டினி போட்டான் சிங்களக் காடையன்.

இவன் துன்புறுத்தப்பட்டு வந்த மூன்று நாட்களும் இவனின் வாயிலிருந்து “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற வார்த்தைகள் வந்ததனாலே, இந்த வீரன் மிகவும் துன்புறுத்தப்பட்டான்.

எவ்வளவு வலிகள் கொடுக்கப்பட்ட போதும், இவன் மண்டியிடவேயில்லை..! இதனை சகித்துக் கொள்ள முடியாத சிங்களக் காடையர்கள், அங்கம் அங்கமாக கூரிய கத்தியினால் கீறி இவனை துன்புறுத்தி கொடுமைப்படுத்தினார்கள்.


ஒவ்வொரு கீறல் விழும் போதெல்லாம் “அண்ணன் வாழ்க, தமிழீழம் மலர்க” என்றே கூறிக் கொண்டிருந்தான். இறுதியில் இந்த வீரனின் வீரத்தினைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்களக் காட்டுமிராண்டித் தளபதி கொன்று விடும்படி சைகை காட்டவே… இவனின் கழுத்திலே அந்தக் கூரிய கத்தியினை வைத்து சடார் என இழுத்து விட்டான் ஒரு காட்டுமிராண்டிச் சிங்களவன். தொண்டைக்குழி அறுபட்டு இரத்தம் சீறி அவனின் உயிர் அவனை விட்டுப் பிரிவதை மிகுந்த வலிகளோடு பார்த்துக் கொண்டிருந்ததைத் தவிர கைகள் கட்டப்பட்டிருந்த எம்மைப் போன்ற போராளிகளால் எதுவுமே செய்யமுடியாமல் நாதியாற்றுப் போனோம். கொலை செய்தபின் இவனின் உள்ளாடைக்குள் எமக்கே தெரியாமல் இவன் மறைத்து வைத்திருந்த புலிக்கொடியினை எடுத்து இவனின் மேல் போர்த்தி விட்டனர் சிங்களக் காட்டுமிராண்டிகள்..!

எங்கள் அனைவரினதும் தாக்குதல்களுக்குரிய பொறுப்பினை ஏற்று நடத்திய தளபதிதான் இந்த மாவீரன்!

இந்த மாவீரன், சிறு வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பல களங்களைக் கண்ட சிறந்த வேவுப்புலி வீரனாவான்!
2008 முதல் 2009 வரையிலான காலப்பகுதியிலே முக்கியமான ஒரு தளபதியின் மெய்பாதுகாப்பாளனாக இருந்து செயற்பட்டவன். சிறு வயதினிலேயே போராட்டத்தில் இணைந்ததனால் தலைவர் மீதும், தாய்மண்ணின் மீதும் மிகுந்த பற்றுடையவன் இவ்வீரனை கொடுமைகள் செய்து கொலை செய்வதை எங்களால் பார்க்க மட்டும்தான் முடிந்ததே தவிர வேறு எதுவும் செய்ய முடியாத கைகள் கட்டப்பட்ட நிலையில் நாம் இருந்தோம். இந்த மாவீரனின் உயிர் பிரியும் நேரத்தில் கூட இவனின் உதடுகளிலிருந்து “அண்ணன் வாழ்க”, “தமிழீழம் மலர்க”, “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற வீர வார்த்தைகளுடனேயே இவனின் உயிரும் அடங்கிப் போனது!

இந்த வீரனின் உயிர் பிரியும் நேரங்களை நான் மட்டும் பார்க்கவில்லை. அந்த இடத்தில் நான் உட்பட பதிமூன்று போராளிகள் இருந்தோம். அதில் ஐந்து பெண் போராளிகள். அவர்களை எங்களிடம் இருந்து பிரித்துச் சென்று விட்டார்கள். அந்தச் சகோதரிகளின் நிலை இதுவரை என்னவென்று தெரியாது!

இந்தப் படத்தினைப் பார்க்கும் போதெல்லாம் என் உயிர் வலிக்கின்றது. என் ஆயுள் வரை மாறாத வலிகளை இந்தப்படமும், இதற்குரிய சம்பவங்களும் எனக்குள் ஏற்படுத்தியிருக்கின்றது”!

(கண்கள் கலங்கியபடி)

“என் உயிர்த்தோழனே! எங்கள் அண்ணன் வளர்த்த புலிக்குட்டி நீ! உனக்கு நிகழ்ந்த கொடுமைகளை நினைத்து என் இதயம் கொதிக்கிறது. நீயும் நானும் ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒன்றாக உறங்கிய காலங்களும்… பகைவனைக் கொன்றொழித்த அந்த வீரச்சமர் புரிந்த காலங்கள் அனைத்தையும் நினைக்கும் போது என் இதயம் அழுது வெடிக்கின்றது தோழனே!!! என் தோழனே! நீ இறுதியாக உரைத்த வார்த்தைகள் நிச்சயம் நிறைவேறும்!”

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

என என் இதயத்தை கனக்க வைத்தார், பெயர் குறிப்பிட விரும்பாத அந்த உன்னதமான விடுதலைப் போராளி!

மேற்குறிப்பிட்ட வீரனைப் பற்றிய சுருக்கமான சில பதிவுகள்.

இவன் சிறு வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் இணைந்ததனால் விடுதலைப் போராட்டத்தின் போரியல் மரபுகளை விரைவினிலேயே கற்று, கானகன் என்ற பெயருடன் விடுதலைப் போராளியாக வெளியேறினான் .

துடிப்பு மிக்க இளைஞனாகவும், துணிச்சல் மிக்க வீரனாகவும் தான் பார்த்து வந்த அனைத்துக் காட்சிகளையும் தன் நினைவுகளில் பதிவு செய்து பல வருடங்கள் கழித்தாலும், அந்தக் காட்சிகளை அப்படியே உண்மைத் தன்மையுடன் விபரிக்கும் இவனின் நினைவாற்றலைக் கண்டு வியந்து போன இவனின் தளபதிகள், இவனின் நினைவாற்றலுக்கு ஏற்றால் போல் இவனை வேவுப்படையணியின் விசேட கொமாண்டோ பயிற்சில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டனர்.


தளபதிகளின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட கானகன், விசேட வேவுப் பயிற்சியினை கச்சிதமாக முடித்துக் கொண்டு வேவு நடவடிக்கைகளிலும் சிறப்பாகச் செயற்பட்டு வந்ததோடு… ஒரு நாள் யாரும் எதிர்பாராத சமயத்தில் வேவுக்குச் சென்று இடையூறாக இருந்த சிங்கள இராணுவப் படையினர் ஐவருடன் தன்னந்தனியாகப் போராடி அந்த ஜந்து இராணுவத்தினரையும் கொன்று அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தி தனது வேவு நடவடிக்கையின் வீர வரலாற்றினை பதிவு செய்தான். இந்த விடயத்தினை அறிந்த தேசியத் தலைவர் அவர்கள் கானகனுக்கு “புயல்வீரன்” என்ற பெருமைமிகு பெயரினைச் சூட்டி கௌரவப்படுத்தினார்.

இவனின் தனித்துவமான வீரதீரச் செயல்களினால் படிப்படியாக உயர்ந்து “இராதா வான்காப்புப் படையணியின்” சிறப்பு வேவுப் பிரிவின் தளபதியாக உயருமளவிற்குப் பெயர் பெற்றான்.

மேலும், சில குறிப்பிட்ட காலப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் அதி முக்கிய தளபதிகளில் ஒருவரான “றட்ணம் மாஸ்ரர்” அவர்களுக்கு மெய்ப்பாதுகாவலனாகவும் பணியாற்றியுள்ளான்.

பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவின் காலப்பகுதியில் மன்னார் மாவட்டக் கட்டளைத் தளபதியாக இருந்த பால்ராஜ் அண்ணாவின் துணைக் கட்டளைத் தளபதியாகவும் திறம்படச் செயற்பட்டு வந்தான்.

இந்த மாவீரனைப் போலவே பல போராளிகள் முள்ளிவாய்க்காலின் இறுதி நேர யுத்தத்தில் இறுதி வரை நின்று தாய் மண்ணிற்காகவே போராடி உயிர் துறந்து வெளியுலகிற்குத் தெரியாமலேயே மக்களோடு மக்களாக மண்ணிற்குள் புதையுண்டு போயுள்ளார்கள். சிலர் அடையாளம் தெரியாதளவிற்கு எரிக்கப்பட்டு பின் அடையாளமே தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டனர்.


இந்தப் புண்ணிய வீரர்களைப் பெற்றெடுத்த தாய்மார்களும், உறவினர்களும் இன்னும் இன்றுவரையும் தேடியே வருகின்றனர். தாய் மண்ணின் விடிவிற்காய் இறுதி வரை நின்று போரிட்டு உயிர் துறந்த மாவீரர்களுக்கு நாமும் அவர்களுக்குரிய தகுந்த மரியாதையினைக் கொடுக்காமலும், அவர்களின் வீர வரலாற்றினை தெரிந்து கொள்ளாமலும் இன்றுவரையும் மறந்தே வாழ்ந்து வருகின்றோம்.

இந்தப் புண்ணிய வீரர்களின் வீரச்சாவானது சாதாரண நிகழ்வாகிப் போய் விடக்கூடாது என்பதற்காகவும், இவர்களின் வீரவரலாறுகள் யாரும் அறியாமல் மறைந்து அழிந்துவிடக்கூடாது என்பதற்காகவும் அவர்களுக்குரிய மரியாதையினையைக் கொடுத்து கௌரவப்படுத்தி வெளியுலகிற்குத் தெரியப்படுத்துகின்ற வகையில் இந்தப் புண்ணியவான்களின் உயிர் பிரியும் போது இவர்களோடு இறுதி வரை நின்று உயிர் தப்பி வந்த போராளிகளும், மக்களும்தான் இவர்களைப் போன்ற மாவீரர்களின் உண்மை விபரங்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்த வேண்டும்.

எமக்காகவும், எம் மண்ணின் விடிவிற்காகவும் இறுதிவரை நின்று போராடி உயிர் துறந்தவர்களை நாம்தான் கௌரவித்து… அவர்களுக்குரிய மரியாதையையும் வழங்க வேண்டும்.

வல்வை அகலினியன்.
             (31.10.2013)

இந்தப் பதிவின் இணைய வடிவம்:
1, பதிவு இணையம்
2, தேசக்காற்று இணையம்
3, வெளிச்சவீடு இணையம்
4, GTV இணையம்
5, விவசாயி இணையம்
6, ஈழவிடியல் இணையம்
7, nanjilsubash.blogspot.com
8, netrikkan-newspaper
யார் உண்மையான போராளிகள்..? முகவரியில்லாத முகநூலில் உலாவுபவர்களா..?



தங்களது தனிப்பட்ட காரணங்களால் தங்களுக்கு பிடிக்காதவர்களை… சரியான புரிதல் இல்லாமல்… தெளிவில்லாமல்… சரியான தேடலும் இல்லாமல்… மனதில் தீய எண்ணங்களையும், அழுக்குகளையும் தங்களுக்குள்ளே அடுக்கி வைத்துக் கொண்டு காழ்ப்புணர்ச்சி, குரோதம், குரூர குணம் கொண்டு எந்தவித காரணமுமின்றி சிறுபிள்ளைத்தனமாக பழிவாங்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு….

வேறு உணர்வாளர்கள் எழுதிய பதிவுகளை அப்படியே நகல் (Copy) எடுத்து தங்களது பாணியில் சில சில மாற்றங்கள் செய்து தங்களது போலி முகநூலில் பதிவு செய்து தங்களை ஒரு தமிழ் உணர்வாளர்களாகவும்… தங்களை ஒரு விடுதலைப் போராளிகளாகவும் வெளி வேடம் போட்டுக் காட்டிக் கொண்டு உலாவும் “காவாலிகளை” நம்பும் மூடர் கூட்டமானது…

போலிப் புலி உணர்வாளர்களால் வெளுத்ததெல்லாம் பால் எனக் கவரப்பட்டு உண்மையான உணர்வாளனை நசுக்கியே அவனின் உணர்வுகளையும் சாகடித்து விடுகிறார்கள்!!

சிலருக்கு…

இந்த முகநூல் இல்லையென்றால் பக்கத்து வீட்டுக்காரனுக்குக் கூட அவர்களின் முகம் தெரியாது, அவர்கள் வசிக்கின்ற ஊருக்குக் கூட அவர்களைப் பற்றிய முகவரியும் தெரியாது.!!

அவ்வாறு இருந்தபடி எந்த வேலைகளையும் செய்யாமல் வீட்டில் வெட்டியாக இருந்து கொண்டு இணையங்கள் ஊடாகவும் அடுத்தவர் முகநூல் ஊடாகவும் அவர்களின் பதிவுகளை திருடி எடுத்து சிறு மாற்றம் செய்து தங்கள் பாணியில் தாங்களே எழுதியது போல் பதிவிட்டு அடுத்தவர்களின் விருப்பத்தைக் கூட கேட்காமல் அவர்களின் முகநூல்களில் வலுக்கட்டாயமாக சொருகி (Tag) விட்டுத் தாங்களும் ஒரு உண்மையான போராளி என நரி வேசம் போடுகிறார்கள்.

இந்தப் போலியான நரிக்கூட்டங்களை நம்பி… அவர்கள் உதிக்கின்ற வார்த்தைகள் அனைத்தையும் தேவ வார்த்தைகளென நம்பி, இப்படியான நரிக்கூட்டங்களை தளபதி நிலையில் உயர்த்தி பார்க்கின்ற மகா கேவலத்தை எவ்வாறு சொல்வது?

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த எந்தவொரு புலி வீரனும் (சமர்க்களங்களிலும் இராணுவ கடமைகளிலும் சேவையாற்றுகிற போராளிகளைத் தவிர) தன்னைப் பற்றிய விபரங்களையும், தான் யார் என்பதையும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மக்களுக்கே ஒரு போதும் சொன்னது கிடையாது!

அதிலும் முக்கியமாக புலனாய்வுப்பிரிவிலும், கரும்புலிகள் படையணியிலும் இருப்பவர்கள் வேறு படையணிப் போராளிகளுக்கு தம்மை ஒருபோதும் இனங் காட்டிக் கொண்டதும் கிடையாது!!

உண்மையான எந்தப் போராளியும் அதை விரும்புவதும் கிடையாது!

மற்றைய போராளிகளும் அதை அறிந்து கொள்ள ஒரு போதும் துடிப்பதும் கிடையாது!

தேசியத் தலைவனின் வளர்ப்பு அத்தகையது!

அதனால்தான் விடுதலைப் புலிகள் அமைப்பு கட்டுக்கோப்புடன் வளர்ந்து மக்கள் மனதிலும் நீங்காத தனிப்பெரும் இடத்தினைப் பிடித்து உலகினில் உயர்ந்து தனக்கென்று ஒரு தனியான இடத்தை தக்க வைத்திருக்கிறது..

ஆனால், தற்போது போற போக்கைப் பார்த்தால் அந்த உயரிய இடத்தை தகர்த்து எறிந்து விடுவார்கள் போல… இந்த “முகநூல் போலிகள்”!!

வன்னி நிலப்பரப்பில் வாழ்ந்த சிறு குழந்தை முதல் முதியோர் வரை அனைத்துத் தளபதிகளையும் பார்த்து பேசி அருகினில் இருந்து உணவு கூட அருந்தி உள்ளார்கள்.. அது மட்டுமல்லாமல் தாக்குதல் விமானங்களின் பெயர்களும், படகுகள், வாகனங்கள் மற்றும் கனரக ஆயுதங்கள் என அனைத்துப் பெயர்களையும் வரிசையாக ஒப்பிப்பார்கள்.

சாதாரண மக்களுக்கே அனைத்தும் தெரிகின்ற போது… எதுவும் அறியாத… திரைப்பட கதாநாயகர்களின் போலியான கூத்துக்களை நிஜம் என நம்பும் மூடர்கள் கூட்டமானது இந்த “முகநூல் போலிகள்” கூறும் விடுதலைப் புலிகள் பற்றிய கதைகளை நம்பி இந்தப் போலிகளுக்கு “தளபதி”, “மாவீரன்” மற்றும் உயர்ந்த பதவி நிலைகளைக் கொடுத்து வணங்கத் தொடங்குகிறார்கள்..!

இது இவ்வாறு இருக்க…

பலர் முகநூல்களில் புலி வேசம் போட்டுத் திரிவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. இந்தப் போலிகள் பதிவுகளோடு நின்று விடுவதில்லை…

“அடுத்த கட்ட போராட்டம் ஆரமபிக்கப் போறோம், ஆட்கள் தேவை, பணம் தேவை” என்றும் “தலைவர்தான் தங்களை ஆட்கள் சேர்க்கச் சொல்லியிருக்கிறார்”, “தலைவரோடு தொடர்பில் இருக்கிறோம்” என்றும் கூறி அடுத்த பெரிய மகா இடியைப் போட்டு விடுகிறார்கள்…

இதை நம்பி திரைப்படக் கதாநாயகர்களை உண்மையான தலைவனாக நம்பும் மூடர் கூட்டமானது, தங்களுக்கு தெரிந்த நண்பர்களையும் சேர்த்துக் கொண்டு போராடப் போகிறோம் என தங்கள் வீட்டிற்கும் சொல்லிக் கொண்டு கிளம்புவதுதான் அடுத்த மகா பரிதாபம்!!!


உண்மையான ஒரு விடுதலை வீரன் “தன்னை இன்னார்” என தன்னைச் சார்ந்த போராளிகளுக்கும் தன் சொந்தங்களுக்கும் அடையாளப்படுத்திக் கொள்ளாத போது… எவ்வாறு முகவரி தெரிந்து கொள்ள முடியாத முகநூலில் தங்களை போராளி என அடையாளப்படுத்த முடியும்? அதை நம்புகின்ற கூட்டமும் படு முட்டாள்கள் கூட்டமே!!

ஒரு கொலைக்காரன், ஒரு கற்பழிப்புக்காரன், ஒரு கொள்ளைக்காரன், ஒரு உளவாளி, சிங்கள அடி வருடிகள், ஒட்டுக்குழுக்கள் மற்றும் பல தேசத் துரோகிகள் என பல கூட்டங்களும் ஒன்று சேர்ந்து கொண்டு… தமிழீழ தேசம் பற்றியும், விடுதலைப் போராட்டம் பற்றியும் மற்றும் விடுதலைப் புலிகள் பற்றியும் பதிவுகளை இட்டு தாம் மிகவும் யோக்கியமானவர்களாகக் காட்டிக் கொண்டு உண்மையான போராளிகளையும், தமிழ் உணர்வாளர்களையும் தங்களது நச்சு வலையில் சிக்க வைப்பதற்கே… என்பதை ஏன், எந்தவொரு தமிழரும் உணர்ந்தது கொள்வதில்லை???

இது இவ்வாறு இருக்க ஒரு சிலர் இதே போன்ற பல போராட்டப் பதிவுகளை தங்களது முகநூல்களில் பதிவு செய்து தனக்கென்று ஒரு சுய சிந்திக்கும் ஆற்றல் இல்லாத ஒரு மூடர் கூட்டத்தை முகநூலில் சேர்த்து வைத்துக் கொண்டு…

தன் தனிப்பட்ட காரணங்களால் தனக்குப் பிடிக்காதவர்களையும், உண்மையான உணர்வாளர்களையும் தன் போலிப் பதிவுகளுக்கு விருப்பம் தெரிவித்து பின்னூட்டம் இடும் மூடர்களோடு சேர்ந்து அந்த உணர்வாளனின் குரல் வளையினை நசுக்கி துரோகிப் பட்டம் கொடுத்து பதிவுகள் இடுவது மகா வேதனை!!

முகம் தெரியாத முகநூலில் எந்தவொரு உளவாளியும் இருக்கலாம் என்பதை அறியாதவன் உண்மையான போராளியே கிடையாது!!!

தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கே தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாத போராளியானவன் எவ்வாறு முகநூலில் உள்ளவர்களுக்குத் தன்னை ஒரு போராளி என்றும், தளபதி என்றும் தன் புகைப்படங்களை அனுப்பியும், தான் ஒரு கரும்புலி என்றும், புலனாய்வதுறை என்றும் சொல்லிக் கொண்டும் திரிவான்??

இதை ஏன் யாரும் உணர்ந்து பார்ப்பதில்லை!!!

– இன்னும் வரும்….

"காகிதப் பூக்கள்
கண்களைக் கவர்வதால்…
நிஜப் பூக்கள் வாழ்வினில்
நிம்மதியை இழந்து விடுகின்றன..!”

- வல்வை அகலினியன்
              (08.11.2014)

இந்தப் பதிவின் இணைய வடிவம்:
1, சங்கதி இணையம்
2, விவசாயி இணையம்
3, வெளிச்சவீடு இணையம்

பேய்கள் இருப்பது உண்மையா.?? இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.??


அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...?? அவ்வாறெனில், தினமும் இலட்சக்கணக்கில் இறைச்சிக்காகக் கொல்லப்படும் ஆடுகள், மாடுகள்,கோழிகள், மீன்களின் பேய்கள் ஏன் வருவதில்லை???

இதுவரையும், ஒரு மாட்டின் பேயை, ஒரு ஆட்டின்  பேயை, ஒரு கோழியின் பேயை எவர் பார்த்ததுண்டு???

மனிதர்களில் இறந்தவர்களுக்காக ஆத்மா சாந்தியடைய பல வகைகளில் பல பூசைகள், கிரியைகள் செய்தும் பல மூட நம்பிக்கையாளரின் குருட்டுக் கண்களுக்கு பல வடிவங்களில் பல பேய்கள் உலாவும் போது... 

கதறக் கதற ஈவிரக்கமின்றி கொலை செய்யப்படும் மிருகங்கள் பறவைகளின் உயிர்களின் ஆத்மா சாந்தியடைய எதுவுமே செய்யாமல்... அந்த மிருகங்கள், பறவைகள் பேய்கள் பற்றி இதுவரையும் யாரும் அறிந்ததுமில்லை... நேரடியாகப் பார்த்ததுமில்லை!!!!


எந்தவித கிரியைகளும்... பூசைகளும் செய்யாமல் இந்த உயிரினங்களின் ஆத்மா சாந்தியடையும் போது... இறந்து போன மனிதர்களுக்கு மட்டுமே ஏன் ஆத்மா சாந்தியடைய எனச் சொல்லிக் கொண்டு பல கிரியைகள்... பல பூசைகள் செய்ய வேண்டும்??

ஒருவேளை அந்தப் பூசைகள்... கிரியைகள் செய்வதால்தான் மனிதப் பேய்கள் வருகிறதோ??? 

கிரியைகள்... பூசைகளை நம்புவதா??? அல்லது பேய்களை நம்புவதா????

நவீன விஞ்ஞான உலகத்தில் ஆடைகள் அணிந்த உடலை ஊடுருவி நாளங்கள், நாடிகள், எலும்புகள் எனத் தொடர்ந்து இன்னும் பல பல காட்சிகளை படமாக்கி கொள்ள பல படப்பிடிப்புக் கருவிகள் வந்துள்ள போதும் ஏன் இதுவரை ஒரு பேயைப் படம்பிடித்து அந்தப் பேயிடமிருந்து ஒரு நேர்காணலை எந்தவொரு விஞ்ஞானிகளும் செய்ததில்லை???


உயிருடன் இருக்கும் ஒரு சக்தியும் இல்லாத மனிதனானவன் எல்லாமற்று இறந்து போன பின்பு, பேயாகி சக்தி படைத்து வருகிறதோடு பலரையும் பயமுறுத்தி பழி வாங்குகிறான் என்றால்....

ஏன் உயிருடன் இருக்கும் போது அந்தச் சக்தி அவனுக்குக் கிடைப்பதில்லை??? அப்படி ஒரு சக்தி பேய்களுக்கு கிடைக்குமெனில், அனைவரும் இறந்துபோனால் சக்தி கிடைத்த மனிதராகலாம் அல்லவா???

சரி... சக்தி கிடைத்த பேய்கள் எப்போது இறக்கும்??? 

அவ்வாறு இறக்காது என்றால்... ஒவ்வொரு தெருக்களிலும் சக்தி படைத்த பேய்களின் கூட்டமே கும்மாளம் அடித்துத் திரியுமே??? 

அப்படி கும்மாளம் அடித்து அட்டகாசம் செய்த பேய்களை ஏன் யாருமே பார்க்கவில்லை???

சக்தி வாய்ந்த பேய், தனக்குத் தேவையானவற்றை தானே தனது சக்தியால் எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே..??? எதுக்கு பயந்து, கோழைகள் போல் இன்னொருவர் மூலம் கேட்க வேண்டும்???


பேய்க்கு அருகில் போனால்... பேய் பிடித்து விடுமெனில், பேய் பிடித்தவரின் அருகில் நிற்கும் போது ஏன் யாரையும் பேய் பிடிப்பதில்லை???

இரவில் மட்டுமே பேய் வரும் என்றால், எவ்வாறு இன்னொருவரைப் பிடித்து பகலில் வந்து விசர் ஆட்டம் ஆட வேண்டும்???

முள்ளிவாய்க்கால் மண்ணிலே ஒன்றரை இலட்சம் மக்கள் விதவிதமாகக் மிகவும் கொடூரமாகக் கொல்லப்பட்டும், எந்தவிதமான கிரியைகளும் செய்யாமலே புதைக்கப்பட்டார்கள்!

இன்று அந்த வன்னிக் காட்டுப்பகுதியில் பழையபடி நம் உறவுகள் போய் குடி அமைத்து நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அங்கு ஆத்மா சாந்தியடையாத பேய்களை இதுவரையும் யாருமே கண்டதில்லையே, ஏன்???

மசூதிகள் இசுலாமியர்களுடையது, கோவில்கள் இந்துக்களுடையது. இவ் ஆலயங்களில் மட்டும் பேய்களை விரட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்றால், கிருத்தவர்களின் தேவாலயங்களில் மட்டும் ஏன் பேய்களை விரட்டுவதில்லை??? அவ்வாறெனில், அவர்களுக்குப் பேய் பிடித்தால்... அவர்கள் எங்கு போவார்கள்?


சரி ஒரு பேயை ஓட்ட மசூதிகள்... கோவில்கள் உண்டெனில்... மசூதி, கோவிலுக்கு சக்தி இருக்கிறதெனில்... ஏன் பேய் வந்து பிடிக்காமல் இருப்பதற்காக சம்மந்தப்பட்ட கோவில்களால் எதுவுமே செய்ய முடியாமல் இன்றுவரையும் உள்ளது?

சக்தி வாய்ந்த கோவில்களில் வைத்து, சக்தி வாய்ந்த பேய்களை ஓட்ட முடியுமெனில், கோவில்கள் வன்னி மண்ணில் பல நூறு இருந்ததும் (சிறு சிறு கோவில்கள் உட்பட) பேய் ஓட்ட சக்தி வாய்ந்த கோவில்களால் பேயை விட சக்தி குறைந்த (மந்திர சக்தி) குண்டுகளை ஏன் விரட்ட முடியாமல் அந்தக் குண்டுகளிலாலேயே கோவில்களும் அழிந்து போனது???

ஒரு கோவிலில் சிலையாக இருக்கும், ஒரு சாமி சிலையை பெயர்த்தெடுத்து ஒரு சாதாரண சக்தி இல்லாத மனிதன் திருடிக் கொண்டு ஓடி விடுகிறான். அவ்வாறெனில், சக்தி வாய்ந்த பேயை விரட்ட முடிந்த சாமியால் சாதாரண மனிதனிடமிருந்து ஏன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போனது???

அவ்வாறான சாமியே பொய்யாக இருக்கும் போது, பேய்கள் மட்டும் எப்படி உண்மையாக இருக்க முடியும்???

இல்லாத பேய்களை விரட்டும் கோவில்கள் மட்டும், எப்படி உண்மையாக இருக்கு முடியும்??


ஒருசிலர் பேயை உண்மையிலேயே பார்த்தேன் என்பார்கள்... அது, அதிக பயத்தின் காரணமாக பேயாக நினைத்து ஒரு உருவத்தைப் பார்த்து, மிகவும் பயந்து அதனால் மனதில் ஏற்படும் அதிக அழுத்தம் காரணமாக உண்டாகும் ஒரு பயமும், பதற்றமும் நம்மை மிரள வைத்து பேய் பிடித்தவன் போல் ஆகிவிடுகிறோம்..! 

பின்பு, நவீன மருத்துவத்தை நம்பாமல் போலிச் சாமியாரிடம் போய் நாம் மாட்டிக் கொண்டு பேய் பிடித்து விட்டது என்று நம்பித் தொலைக்கிறோம்!!!

மின்சாரமே இல்லாத வன்னி மண்ணில் வாழ்ந்த சிறு தொகை மக்களை விட மற்ற அனைத்து மக்களும் காட்டுப் பிரேசங்களில்தான் வாழ்ந்தார்கள். (காடு என்றால் காடு அல்ல... காட்டை அண்டிய பகுதிகள்) தினமும் பல மக்கள் பல மாதிரி குண்டு வீச்சுக்களால் இறந்து போனார்கள்!!! ஆனால், அந்த பதற்றம் நிறைந்த நேரங்களில் இறந்தவர்களுக்காக எந்தவிதமான கிரியைகளும் யாரும்  செய்ததில்லை! 


இருந்தும் அந்த வன்னி மண்ணிலே பேய்கள் வந்ததில்லை!!! காரணம், அந்த மண்ணிலே வாழ்ந்த மக்கள் சாதிகளை, மதங்களை, மூட நம்பிக்கைகளை மறந்து... தாய் மண்ணின் விடுதலையே இலக்கு என்று வாழ்ந்தார்கள்!! அதனால் அவர்களுக்குப் போலியான எந்தப் பேய்களும் தெரிவதில்லை! !

மின்சாரமே இல்லாத காட்டுப் பகுதியில் நிறைய உயிர்கள் இறந்தும், எந்தவிதமான கிரியைகளும் செய்யாமல் பேய்களே வராமல் இருக்கும் போது... எப்போதும் மின்சாரம் இருக்கும் உங்கள் ஊரில் பேய்கள் வருவது என்பது வெறும் மூட நம்பிக்கையே!!!


(இந்தப் பதிவானது எனக்குத்தோன்றிய எண்ணங்களே தவிர, ஆராய்ச்சிப் பதிவு அல்ல... ஆராய்ச்சி செய்யுமளவிற்கு நான் அறிவாளியும் அல்ல)