முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்படுவது ஏன்? முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமும்…! தமிழர்களின் புதிய வீர சரித்திரமும்!

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்படுவது ஏன்? முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமும்…! தமிழர்களின் புதிய வீர சரித்திரமும்!


பல தசாப்தங்களாக சாதியால், மதத்தால் பிளவுபட்டு நிற்கின்ற தமிழர்களை, தனித்துவமான தமிழர்களாக ஒரே குடையின் கீழ் இணைத்து விடுகின்ற ஒரு புனிதமான வீரத்தின் அடையாள முற்றமே… முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்!

ஈழத்திலே சில இலட்சம் தமிழர்கள் பிரபாகரன் என்ற மாபெரும் தலைவனால் சாதி, மதங்களையெல்லாம் துறந்து வீரத்தமிழர்களாக ஒன்றுபட்டு ஒரு கோடிக்கு மேல் உள்ள சிங்களவர்களை எதிர்த்து களமாடி உலக அரங்கினிலே தமிழனுக்கென்று தனிக்குணமும், தமிழனுக்கென்று தனித்துவமான வீரமும் உண்டு என்று அடையாளப்படுத்தி சரித்திரத்தை எழுதி வைத்தனர்.
அதனால், ஈழத்தமிழர்களை வெற்றி கொள்ள முடியாத சிங்களமும், இறையாண்மை இறந்து போன இந்தியாவும் கருணையற்ற சர்வதேசத்தை துணைக்கு இழுத்து வந்து மிகவும் படுகேவலமாக, கோழைத்தனமாக சில ஆயிரம் போராளிகளுடன் மோதி தமது தோல்விக்கான வெற்றியை சூடிக் கொண்டதாக பறைசாற்றி வருகின்றனர்.
ஒரே கொள்கையோடு… ஒரே இலட்சியப் பாதையில் பயணிக்கின்ற ஒரு இனத்தை வல்லரசுகளால் இலகுவாக வெற்றி கொண்டதாக வரலாறுகள் எங்கும் இல்லை!
ஒன்றுபட்டு ஒரே இனமாக நிற்கின்ற… வெற்றி கொள்ள முடியாத ஒரு இனத்தை பிரிவினைகளைத் தோற்றுவித்து… பிளவுபட வைத்து… அந்த இனத்திற்குள்ளேயே எதிரிகளையும், துரோகிகளையும் உருவாக்கி… ஒற்றுமையைக் குலைத்து… அவர்களுக்குள்ளேயே பரஸ்பர கருத்து முரண்பாடுகளை தோற்றுவித்து… அவர்களுக்குள்ளேயே சண்டைகளை உருவாக்கி…
தாம் நினைத்ததை குறிப்பிட்ட அந்த இனங்கள் வாழும் தேசத்தினிலே கால்பதித்து விடுதலைக்கான போர் என்று யுத்தங்களை ஆரம்பித்து வெற்றி கொள்வதென்பது வல்லரசுகளின் கைவந்த கலையானதும், போர்த் தந்திரமும் ஆகும்..!
இந்த வகையில்தான் குறிப்பிட்ட அண்மைக் காலங்களில் ஆப்கானிஸ்தான், ஈராக் போர்… லிபியாவின் வீழ்ச்சி, இப்போது புகைந்துக் கொண்டிருக்கும் சிரியாவின் உள்நாட்டுப் பிரச்சினைகள்!
ஈழத்திலும் சில இலட்சம் மக்களுக்குள் இவ்வாறான பல சதிவலைகளை விரித்து மாற்று இயக்கங்களை உருவாக்கியும், வளர்த்தும் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வெற்றி கொள்ள முடியாமல் போனது, இந்தியாவின் உழுத்துப் போன உளவுத்துறையால்! காரணம், பிரபாகரன் என்ற தீர்க்கதரிசனமான மாபெரும் தலைவனால், இந்தியா உளவுத்துறையின் சதித்திட்டங்கள் உண்மையிலேயே உழுத்துப் போக வைக்கப்பட்டன..!
மக்களின் பேராதரவுடன் வளர்ந்து வந்த ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்புக்குள்ளேயே எண்பதாம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து மாத்தையா போன்ற பல தலைவர்களை வளைத்துப் போட்டும் பலன் அளிக்கவில்லை.
ஒவ்வொரு சறுக்கல்களிலும் பீனிக்ஸ் பறவையைப் போல் விடுதலைப் புலிகளின் உளவுத்துறையும் அசுர வளர்ச்சியடைந்தது! அத்துடன் இந்திய உளவுததுறையின் சூழ்ச்சிகளையும், திட்டங்களையும் சிதைத்தும், உடைத்தும் தவிடு பொடியாக்கி வந்ததுடன்… இவர்களின் இவ்வாறான நாசகார வேலைகளால் சிறந்த படிப்பினையைக் கற்று சிறந்த பாடங்களாக பதித்து மேலும் மேலும் பெரும் வளர்ச்சி அடைந்தார்கள்!
மரபு வழி இராணுவப் போர் வியூகங்களாலும், குறைந்த ஆட்பலம் மற்றும் குறைந்த ஆயுத தளபாடங்களாலும் பெரும் இராணுவத்தையே தாக்கி விரட்டி, மிரட்டி வருகின்ற மதிநுட்பத்தைக் கண்டு நடுங்கிப் போன இந்தியாவும், கலங்கிப் போன சர்வதேசமும் புலிகளை ஒடுக்குவதற்கான காரணங்களை தேடிக் கொண்டிருந்த நேரம் பார்த்து இலங்கையின் தலை நகரத்திலே ஏழு அடுக்குப் பாதுகாப்புடன்அமெரிக்காவின் “கிறீன் பாரேட்”  இராணுவத்தின் விசேட சிறப்பு பயிற்சி பெற்ற இலங்கை இராணுவத்தின் அசைக்க முடியாத இரும்புப் பிடிக்குள் இருந்த சர்வதேச விமான நிலையத்தினை பதினெட்டுப் போராளிகளுடன் குறைந்த ஆயுத வளங்களுடன் தாக்கி நிர்மூலமாக்கி எந்தவொரு பொதுமகனின் உயிரையும் பறிக்காமல் பல ஆயிரம் கோடி ரூபா இழப்புக்களை ஏற்படுத்தி சில மணித்தியாலங்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தமையைப் பார்த்து இலங்கை மட்டுமல்ல இந்தியாவுடன் சேர்ந்து வல்லரசுகளுமே ஆடிப்போய் விட்டன..!
புலிகளின் வளர்ச்சிகளை ஜீரணித்துக் கொள்ள முடியாத இந்தியாவும், வல்லரசுகளும் அழிப்பதற்கான காரணங்களைத் தேடி வரும் நிலையில், சர்வதேசம் முழுவதும் மக்களின் பேராதரவுடன் வேர் விட்டு பெரும் விருட்சமாக வியாபித்து இருக்கும் ஒரு விடுதலைப் போராட்டத்தினை சிதைத்து உடைப்பதற்கான வழி வகைகளை ஆராய்ந்து வரும் வேளையில் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதல் இலகுவாக்கியது!
பின்லேடனின் அல் கொய்தா இயக்கங்கள் வரிசையில் விடுதலைப் புலிகளை தீவிரவாத இயக்கங்களாக அறிவித்து பல நாடுகளில் தடை செய்து முக்கிய வளங்களை கட்டுப்படுத்தி வந்ததுடன், விடுதலைப் புலிகளை கட்டாய யுத்த நிறுத்தம் செய்ய வைத்து சமாதானம் என்ற போர்வையில் புலிகளின் தலைவர்களை வெளிநாடுகளுக்கு பேச்சுவார்த்தை என்ற ரீதியில் அழைத்து கருணா போன்ற தலைவர்களை தனது கோழைத்தனமான சூழ்ச்சிகளால் விழ வைத்து பிரிவினையைத் தோற்றுவித்தது!
கருணாவின் நிலைமைகளை ஆரம்பத்திலேயே அவதானித்த புலிகளின் உளவுத்துறையானது கருணாவை எதுவுமே செய்ய முடியாமல் போய் விட்டது! காரணம், மாத்தையா போன்று கருணா விடுதலைப் புலிகளின் தலைமையின் பார்வையில் இருக்கவில்லை, மாறாக பிரிவுபட்டிருந்த கிழக்கு மாகாணத்தில் கருணா இருந்தமையால் உடனடியாக புலிகளின் ஆளுகைக்குள் கொண்டு வரமுடியவில்லை.
இனத் துரோகி இந்தியாவானது இக்காரணங்களை கவனத்தில் கொண்டே கருணாவைப் பிரித்தது மட்டுமல்லாமல், விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட வைத்து புலிகளின் தாக்குதல் யுக்திகளையும், போர் வியூகங்களையும், தலைமையின் இருப்பிடங்களையும், ஆயுத வளங்களையும் இனத்துரோகி கருணா மூலமே தரவுகளை எடுத்து புலிகளின் கடல் வளங்களில் இருந்து மெதுமெதுவாக தாக்க ஆரம்பித்து சமாதானத்தை பல ஆண்டுகளாக இழுத்தடித்து புலிகளின் முழுமையான தரவுகளையும் எடுத்த பின்பும் 2005ம் ஆண்டிலிருந்து பல இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்து முடியாமல் வல்லரசுகளையும் துணைக்கு இழுத்து வந்து இறுதியில் 2009 ம் ஆண்டிலே பல இலட்சம் மக்களைக் கொன்றழித்து ஒரு மக்களின் நீதியான விடுதலைப் போராட்டத்தினை வெற்றி கொண்டதாக அறிவித்தது!
இந்த பேரழிவின் முழுச் சதித்திட்டமும் இனத்துரோகி இந்தியாதான் உருவாக்கியிருந்தது. காரணம், விடுதலைப் புலிகளின் வான்படையால் புறநானூற்றுத் தமிழர்களின் உண்மை வீர முகத்தினைக் கண்டது. அவர்கள் ஈழத்தைப் பெற்றால், தமிழ்நாட்டுத் தமிழர்கள் புலிகளால் விழிப்புணர்வு பெற்று தமிழகத்தை தனிநாடாக கேட்டுவிடுவார்கள் என்றும், பின் ஆசியாவில் தமிழ்நாடு வல்லரசு ஆகிவிடும் என்ற பேரச்சமுமே..!
இக்காரணங்களைச் சுருங்கச் சொன்னால், தமிழகத் தமிழர்களுக்கு புரிய வைக்க முடியாமல்… ஈழத்தமிழர்களின் போராட்ட வடிவினை இங்கே கொஞ்சம் விரிவாக பதிவு செய்ய வேண்டி வந்து விட்டது.
நான் என் பதிவின் ஆரம்பத்திற்கே வருகிறேன்…
சில இலட்சம் மக்கள் சாதி மதங்களை துறந்து ஒரே இனமாக ஒன்றுபட்டு நின்றதனால், இலங்கை இந்தியா உட்பட சர்வதேசத்தாலும் இன்று வரையும் வெற்றி கொள்ள முடியாமல் போய் விட்டது. இன்றும் கூட தமிழர்களுக்கான தனித்துவமிக்க அடையாளங்களை உலக அரங்கினில் பதித்து வருவது ஈழத்தமிழர்கள் மட்டுமே!
சில இலட்சம் ஈழத்து மக்களால் செய்ய முடிந்ததை ஏன் ஏழு கோடிக்கு மேல் உள்ள தமிழகத்துத் தமிழர்களால் செய்யமுடியாமல் போனது? காரணம், தமிழகத் தமிழர்களுக்கு முதற் பிரச்சினையாக கொளுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கும்… சாதியப் பிரச்சினைகளும், மதவாதப் பிரச்சினைகளும்தான்!!!
இந்தச் சாதி, மதப் பிரச்சினைகள் தமிழகத் தமிழர்களுக்குள் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் வரையும் கன்னடனும், ஆந்திரனும், கேரளத்தனும் உலகம் அழியும் வரையும் தமிழகத் தமிழர்களை தாக்கி மிரட்டிக் கொண்டே இருப்பார்கள்.
சிங்களவன் தமிழக மீனவர்களை தமிழகக் கடலுக்குள் புகுந்து சுட்டுக் கொலை செய்து கொண்டே இருப்பான்..! தமிழகத் தமிழர்களால் எதுவுமே செய்ய முடியாது என்பதை மத்திய அரசு மூலம் மற்ற மாநிலங்களுக்கும், இலங்கைக்கும தெள்ளத் தெளிவாகவே தெரியும்!
உலகத்தின் மூத்த குடியும், உலகத்தின் வீரமிகு பரம்பரையும் கொண்ட ஒரு தனித்துவமான இனம் சாதிகளாலும், மதங்களாலும் அடிபட்டு, வெட்டுப்பட்டுக் கொண்டு இறந்து கொண்டு இருப்பது மிகவும் கேவலமாகவும், கவலையாகவும் இருக்கின்றது!
தமிழகத் தமிழர்களின் சாதியச் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து வரும் இந்தியாவின் உழுத்துப் போன உளவுத்துறை, எவ்வித பயமுமில்லாமல்… தமிழர்களை ஒன்றுசேர விடாமல் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகிறார்கள்.
உளவுத்துறையின் சதி வேலைகளுக்கு இலகுவாக தமிழகத் தமிழ் தலைவர்களும் புதிய புதிய சாதிய, மதக் கட்சிகளை உருவாக்கி தமிழர்களை மேலும் மேலும் வளர விடாமல் சாதி மதங்களால் பிளவு படுத்தி ஒன்று சேர விடாமல் பிரித்து வருகிறார்கள். இச் செயற்பாடானது உளவுத்துறைக்கு மிகவும் இனிப்பானதாகவே இருக்கிறது. மற்றும் சினிமா என்ற கூத்தாடிகளின் கனவுலகிலும் இன்றைய இளைஞர்கள் மிதந்து ஒரு போலியான கனவு வாழ்க்கையில் பிளவுபட்டு நிற்கிறார்கள்.
ஒரு தனித்துவமான வீரமிகு இனம் ஒன்றுபட்டால்… விடுதலைப் புலிகளின் வீரத்தினை விட பல மடங்கு போர் ஆற்றலும், அறிவும் பெற்று உலகத்தையே கைக்குள் கொண்டு வந்து விடுவார்கள் என்ற பேரச்சம் சர்வதேசத்திற்கு எப்போதுமே உண்டு. இப்போதும் கூட உலகினில் பல பெரிய நாடுகளில் பல முக்கியமான துறைகளில் தமிழர்களின் ஆளுமையே முக்கிய மூளையாக செயற்பட்டு வருகிறது என்பதை தமிழர்கள் அறிவார்களோ, இல்லையோ… சர்வதேசம் நன்கு அறியும்!
ஆகையால்தான், உளவுத்துறையின் சூழ்ச்சிகளோடு தமிழகத்தை ஆளுகின்ற மாற்றான் அரசியல் தலைவர்களால் அடிக்கடி பற்றி எரியும் சாதியக் கொலைகள் ஆகும். இவ்வாறு அவ்வப்போது உருவாக்கிக் கொண்டிருந்தால்தான் தமிழர்களுக்குள்ளேயே அடிபட்டு, வெட்டுப்பட்டு கொல்லப்பட்டு ஒன்றுபடாமல் குரோதத்தினை வளர்த்து ஆறாத பகையாக பழியுணர்ச்சியினை உருவாக்கி, சாதிச் சண்டைகளை மூட்டி, பலவித வழக்குகளை போட்டு சிறைகளில் அடைத்தும் தமிழர்களின் தனித்துவமிக்க குணங்களை வளரவிடாமலும் சாதிய, மதத் தீயினை பற்றவைத்து வருகிறார்கள். இதில் பற்றி எரிவது உண்மைத் தமிழர்கள் மட்டுமே! தப்பிக் கொள்வது மாற்றான் அரசியல் தலைவர்களே! இந்தச் சூழ்ச்சிகளையும், தனது தனித்துவமிக்க குண இயல்புகளையும் அறிந்து கொள்ளாத மக்குத் தமிழனாகவே இறுதி வரை இருந்து இறந்து போகின்றான்!
பின் அவனது வாரிசுகளில் இருந்து தீராப்பகையுடன், பழி உணர்ச்சியுடனும் தமிழன் வளர்க்கப்படுகின்றான். பழி வாங்கப்படுகின்றான். வரலாறுகள் இல்லாமலே மண்ணுக்குள் புதைக்கப்படுகின்றான்! இதுதான் முள்ளிவாய்க்காலுக்கு முன் தமிழகத் தமிழனின் உண்மை நிலை!
2009 ஆம் ஆண்டின் பின் ஈழத்தமிழர்களின் கொடூரமான படுகொலைகளுக்குப் பின்தான் இளைய மானமிக்க அரசியல் தலைவர்களான திரு சீமான், திரு சுப. உதயகுமார், திரு திருமுருகன் காந்தி போன்றவர்களாலும் ஜோ பிரிட்டோ போன்ற மாணவர்கள் தலைவர்களாலும் ஒரே இனமாக ஒன்றுபட்டு வருகிறார்கள். இதை ஜீரணித்துக் கொள்ள முடியாத உளவுத்துறை மாற்றான் அரசியல் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி, தொல். திருமாவளவன் போன்றவர்களை வைத்து ஆட்சிகளில் இருக்கும் போது காட்டுமிராண்டி காவல்துறையை ஏவிவிட்டு போராட்டங்கள், ஒன்று கூடல்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள் அனைத்தாலும் தமிழர்கள் பொங்கி எழுந்து ஒன்று சேரவிடாமல் கலைத்து கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார்கள்!
இந்த இளைய தமிழ் உணர்வுத் தலைவர்களால்தான் தமிழக இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் சமூகம் மிகவும் விழிப்புணர்வுடன் எழுச்சி பெற்று ஒரே இனமாகப் போராடி வருகிறார்கள். பொதுநலவாய மாநாடு மரணநாட்டில் நடப்பதையும், இரக்கமற்ற இனத்துரோகி இந்தியா கலந்து கொள்வதையும் தடுத்த நிறுத்தவும் தமிழகம் முழுவதும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
இப்போதுதான் தமிழகத் தமிழன் கொஞ்சம் கொஞ்சமாக சாதி மதங்களை விட்டு வீரத்தமிழ் இனமாக ஒன்றுபட்டு வருகிறான்.
தமிழகத் தமிழர்கள் சாதி மதங்களை தொலைத்து ஒரே இனமாக ஒன்றுபட்டு பெரும் எழுச்சியுடன் புதிய பரிமாணத்தை உருவாக்குவதை இலகுவாக்க தஞ்சையிலே நிறுவப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கல் நினைவு முற்றம் உருவாக்கி விடும் என்று பயந்து போன உளவுத்துறை, தமிழர்களை ஒருபோதும் ஒன்றுபட விடக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாகவே இருக்கின்றது!
ஈழத்திலே மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டதாலும், புலத்திலே இது போன்ற பெரிய நினைவு இல்லங்கள் இல்லாததாலும் வருடாவருடம் வருகின்ற மாவீரர் தினத்தில் அஞ்சலி செலுத்த புலத்தில் வாழுகின்ற அனைத்து ஈழத்து உறவுகளும்… மாவீரர்களோடு, முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பல இலட்சம் உறவுகளையும் ஒரே இடத்தில் வைத்து அஞ்சலி செலுத்த ஒரு தகுந்த இடம் என்பதால், அனைத்து ஈழத்து உறவுகளும் அடிக்கடி வருகை தந்து பெரிய எழுச்சியினை உருவாக்கி விடுவார்கள் என்பதாலும், ஈழத்து உறவுகளால் தமிழகத்து தமிழர்களும் உணர்வுகளால் ஒன்றுபட்டு விடுவார்கள் என்பதாலும் மிகவும் பயந்து போனது உளவுத்துறை மட்டுமல்ல… பாசிச ஜெயலலிதாவும்தான்!
காலங்காலமாக மத்திய அரசை தமிழர்கள் விரோத சக்தியாக பார்வையிட்டு தமிழகத்திலே மத்திய அரசின் செயல்பாடுகள் முடங்கிப் போய்விடும் என்பதாலும், தமிழகத்தில் வாழுகின்ற அனைத்து தமிழர்களும் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தினால் ஒன்றுபட்டு தமிழக அரசியலில் பல மாற்றங்களை உருவாக்கி மாற்றான் அரசியல் தலைவர்களை புறக்கணித்து ஆட்சியில் உள்ள அரசியலைக் கலைத்து விட்டு புதிய தன்மானமிக்க தமிழக இளைஞர்களை ஆட்சியில் அமர வைத்து விடுவார்கள் என்பதாலும், நடக்கவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் புதிய வகையான அழுத்தங்களை கொடுத்து விடும் என்பதாலும், வரப்போகும் மாவீரர் தினத்தில் புதிய எழுச்சியையும், புரட்சிகளையும் உருவாக்கி விடுவார்கள் என்பதாலும் மிகவும் பயந்து போன உளவுத்துறையும், தமிழக மாற்றான் அரசியல் தலைவியும் பல புதிய சூழ்ச்சிகளை உருவாக்கி சாக்குப் போக்குகளைச் சொல்லி இடித்து வருகிறார்கள்!
ஈழத்திலே… முள்ளிவாய்க்காலிலே இந்தியா அரசின் உதவியுடன் பல இலட்சம் மக்கள் துடிக்கத் துடிக்க கொல்லப்பட்டதை அருகினில் இருந்து காப்பாற்ற முடியாமல் வேடிக்கை பார்த்து குற்ற உணர்ச்சியால் நொந்து போன தமிழகத் தமிழர்கள்…
இப்போது, தஞ்சையிலே தமிழர்களின் இதயத்தினிலே உருவாக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தினை இந்திய அரசின் உதவியுடன் இடித்து நொறுக்கப்படுவதை பார்வைபடும் தூரத்தில் இருந்து தமிழர்கள் வேடிக்கை பார்ப்பதுதான் மிகவும் வேதனையாக இருக்கிறது!
சில இலட்சம் ஈழத்தமிழர்களால் ஒரு பெரும் புரட்சியினை உண்டாக்க முடிந்ததெனில்… ஏன் ஏழு கோடிக்கு மேல் உள்ள மக்களால் எதுவுமே செய்யமுடியாமல் போனது?
முதலில், முள்ளிவாய்க்காலில் துடிக்கத் துடிக்க உன் உறவுகள் கொல்லப்படும் போது “பக்கத்து நாட்டில்தான் நடக்கின்றது” என்றும், “கடல்தான் பிரிக்கின்றது இல்லையேல் இலங்கையே தெரியாமல் அழித்து விடுவோம்” என்றும், “விட்டால் நீந்தியே போய் காப்பாற்றுவோம்” என்றும், “நாம் அனைவரும் சிறுநீர் கழித்தால் இலங்கையில் சுனாமி ஏற்பட்டு இலங்கையே மூழ்கி விடும்” என்றும் வீர வசனம் பேசிய தமிழகத் தமிழனே..!
இப்போது என்ன செய்யப் போகிறாய்?
நீ ஈழத்திலே காப்பாற்ற முடியாமல் கொல்லப்பட்ட அதே உறவுகளின் நினைவு முற்றத்தினை உன் இதயத்திலே கட்டி வைத்துள்ளான் பழ நெடுமாறன் என்ற புனிதன்.
இப்போது உன் இதயமே அறுக்கப்படுகிறது. நீயோ தடுக்க முடியாமல் கோழைத்தனமாக உட்கார்ந்து கிடக்கின்றாய்! அன்று முள்ளிவாய்க்காலிலே உன் உறவுகள் துடிக்கத் துடிக்க கொல்லப்படும் போது அன்று நீ பேசிய வீர வசனங்கள் எங்கே போனது?
சாதியத்திற்குள்ளும், மதத்திற்குள்ளும் புதைத்து விட்டாயா? அல்லது உன் மாற்றான் தலைவர்களின் காலடியில் செருப்பாக அணிந்து விட்டாயா?
எப்போதுதான் நீ சிந்துகின்ற வியர்வையிலும் ரோசம் என்ற இனப் பாசம் வரும்???
தமிழா..! உனக்கு ரோசமே இல்லையா??? இதன்பிறகு நீ எப்போது ஒன்றுபட்டு போராடப் போகின்றாய்? உன் ஒற்றுமைக்கு விடப்பட்ட சவால்! இந்த நினைவு முற்றத்தினை காப்பாற்ற முடியாமல் போனால், உன்னை மாற்றான் தலைவர்கள் அடிமைகளாக்கி இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து ஆட்சி செய்தே வருவார்கள். தமிழனைத் தமிழனே ஆள முடியாமல் ஒரு கேவலமான வாழ்க்கையை வாழ்ந்து இறந்து போகவேண்டியதுதான்!
இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தினை உன் எழுச்சிமிகு போராட்டங்களால் காப்பாற்ற முடியுமானால்… கோட்டையிலே தன்மானத் தமிழன் ஆளுகின்ற ஒரு புதிய சரித்திரம் உருவாகும்! அண்டை மாநிலங்களும் தனது நீண்ட வால்களைச் சுருட்டிக் கொள்ளும்! தமிழக மீனவன் கடலினில் ஏறி நீண்ட தூரம் சென்று சுதந்திரமாக உலா வருவான்!
சாதி மதங்களைப் புதைத்து, ஒரே இனமாக எழுந்து வா! புதிய எழுச்சியுடன் போராடு! புதிய புரட்சி உருவாகும்! அனைத்தும் நம் வசமாகும்!
- வல்வை அகலினியன் 
        (14.11.2013)
(இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தினை உருவாக்க ஆணிவேராக இருந்து செயற்பட்ட மதிப்பிற்குரிய பச்சைத் தமிழன் உயர்திரு பழ.நெடுமாறன் ஐயா அவர்களையும், விடுதலைப் போராளி மதிப்பிற்குரிய திரு வைகோ அண்ணா அவர்களையும், செந்தமிழன் சீமான் அவர்களையும் என் நெஞ்சத்தினிலே இருத்தி வைத்திருப்பதால் அலங்கார வார்த்தைகளினாலே “நன்றி” என்று சொல்ல இங்கு நான் விரும்பவில்லை!)

இந்தப் பதிவின் இணைய வடிவம்:

5, www.vannionline.com

0 comments:

Post a Comment